சத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவும் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.

It is a pleasure to serve you. We trust that the information and available material in Tamil language will be blessing to you, your family and friends. Sathiya Vasanam Ministry is a Unit of The Good News Broadcasting Society. It is a media ministry and we seek to touch lives with the blessing of God’s Word. You will find interesting information that will enrich you spiritual walk with the Lord Jesus and you can begin a closer walk with the Lord through the study of His Word. We welcome you to respond with any need or prayer request you may have. We are available to help you as best as we can and pray for you and your needs. When you log on to our website, you become our friend and we want to do all we can to make your relationship with Jesus Christ enjoyable and fulfilling. Thank you for choosing to log on to www.sathiyavasanam.in

ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 14 செவ்வாய்

இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களையும் ஊழியர்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, இவ்வூழியங்களை தாங்கும் புதிய பங்காளர்கள் ஆதரவாளர்களை கர்த்தர் எழுப்பி தடையின்றி ஊழியம் செய்யப்படுவதற்கும், தேசத்தின் பொருளாதாரத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் நடைபெறும் எல்லா சுவிசேஷ ஊழியங்கள், திருச்சபைகள் வளர்ச்சியடையவும் வேண்டுதல் செய்வோம்.

அலுப்பான வாழ்வும் அர்த்தம் பெறும்!

தியானம்: 2025 அக்டோபர் 14 செவ்வாய் | வேதவாசிப்பு: பிரசங்கி 1:3-11

YouTube video

இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? (பிரசங்கி 1:10).

ஒடுக்கமான வாடகை அறையிலே உட்கார்ந்து, அறையின் கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சகோதரியிடம், ‘ஏன் இப்படி இருக்கிறீர்’ என்று கேட்டேன். ‘இந்த வாழ்க்கை வெறுப்பாய் இருக்கிறது. ஏதோ காலையில் எழும்பி, சமையல் செய்து, வேலைக்குப்போய், அங்கேயும் ஒரே முகங்களைப் பார்த்து, களைத்துப்போய், வீடு வந்து, திரும்பவும் அதே சாப்பாடு நித்திரை. விடியுது இருளுது, வாழ்வும் உருளுது. மனதிலேயோ ஆறுதலில்லை’ என்றாள் அவள். இப்படியே, நமக்கும் சிலசமயம் வாழ்க்கையே அலுத்துப்போனதுபோல தோன்றக்கூடும். தினம்தினம் நடப்பவையே பின்னும் தொடருகின்றன. எதிலும் திருப்தியில்லை. எதுவுமே புதினமானதாக இல்லை. இன்று எந்த நாளும் கொலை செய்திகளை கேட்டே வாழ்க்கை வெறுத்துவிடும் போலிருக்கிறது. மாத்திரமல்ல, திரும்பத்திரும்ப ஒரே கஷ்டங்கள்தான். மாற்றம் வேண்டும் என்பதற்காக எத்தனை பேர் வெளியூர் வெளிநாடு என்று போகிறார்கள். ஆனால், பின்னர் திரும்பி அதே இடத்திற்குத்தானே வரவேண்டும்; எங்கேமாற்றம்? அதுமாத்திரமல்ல, இதுவரை நாம் வாழ்ந்து முடிந்துவிட்ட நாட்கள் யாவும் நமது மனதில் இருக்கிறதா? அதுவும் இல்லை. இதைத்தான் சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமே இல்லை என்று பிரசங்கி எழுதுகிறார்.

ஒரு மனிதன் இருந்தான். படிப்பு, செல்வம், நல்ல தொழில், கௌரவம், எல்லாம் இருந்தது. ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களைக் கவனிப்பதுதான் அவனது பிரதான தொழில். காலையில் எழுந்தால் கிறிஸ்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி, அவர்களை அடித்து, கட்டி இழுத்து வரவேண்டும். இவனுடைய வாழ்வில் மாற்றம் வந்தபோது, துன்பப்படுத்துவதற்காக கிறிஸ்தவர்களைத் தேடினவன் இப்போது கிறிஸ்துவுக்காகத் துன்பப்பட தைரியமாய் அவர்களிடமே சேர்ந்துகொண்டான். “கிறிஸ்துவே தேவன்” என்று தைரியமாக பிரசங்கித்தான். மாத்திரமல்ல, இதுவரை சவுல் என்று அழைக்கப்பட்ட அந்த மனிதன் இப்போது பவுல் என்று அழைக்கப்படுகிறான். வாழ்வில் ஒரு மாற்றம். வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமான செயல்கள். பவுல் தன் வாழ்வுக்குரிய புதிய அர்த்தத்தைப் புரிந்துகொண்டார். இடையில் நடந்ததென்ன? அவருடைய வாழ்விலே உயிர்த்த இயேசு வந்தார். எல்லாம் மாற்றமடைந்தது, எல்லாம் புதிதானது!

தேவபிள்ளையே, நம் வாழ்வில் ஆண்டவரை வரவழைப்போமாக. அவரை அறிந்திருந்தால் போதாது. கடமை ஜெபமும் போதாது. ஆண்டவர் பார்க்கும் கண்களால் நாமும் பார்க்கப் பழகவேண்டும். உடனே புதினமான காரியங்கள் எதுவும் நடக்காது. எனினும், நமக்கு அலுப்புத் தந்த அத்தனையும் அர்த்தமுள்ளதாக மாறும்.

ஜெபம்: அன்பின் பிதாவே, கடமைக்காக கிறிஸ்தவ வாழ்வு, ஜெபம் என்றில்லாமல் கிறிஸ்துவின் சிந்தையால் நிரப்பப்பட்டு அர்த்தமுள்ள வாழ்வு வாழ எங்கள்மேல் கிருபையாயிரும். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (செப்டம்பர் – அக்டோபர் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம்மை வழுவாது பாதுகாத்து வழிநடத்திவரும் அன்பின் தேவன் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வெளிவர தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் தாங்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினாலே நன்றிகளைத் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இத்தியானங்கள் வாயிலாக அநேகமாயிரமான மக்களது வாழ்க்கையிலே கர்த்தர் மகிமையான காரியங்களைச் செய்யும்படியாக உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள். தங்கள் ஆவிக்குரிய நண்பர்கள் விசுவாசிகளுக்கும் தியான நூலை அறிமுகம் செய்துவையுங்கள்.

ஜூலை மாதம் 15ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று சென்னையில் நடை பெற்ற போதகர்கள் விசுவாச பங்காளர்களுக்கான வேதாகம கருத்தரங்கு மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்றது. இதில் உபயோகிக்கப்பட்ட கையேடு விநியோகத்திற்கு உள்ளது. தேவைபட்டோர் எழுதி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அனுதினமும் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் போதிக்க தேவன் கிருபைசெய்து வருகிறார். இவ்வூழி யங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் சத்தியத்தை அறியவும் ஜீவனுள்ள தேவனண்டைக்கு வழிநடத்தப்படவும் வேண்டுதல் செய்கிறோம். இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட தாங்கள் இணைக்கரம் கொடுத்து உதவ அழைக்கிறோம்.

செப்டம்பர் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் தாழ்மையைப் பற்றி நாம் தியானிக்கும்படியாக எழுதியுள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் பிரசங்கியின் புத்தகத்திலிருந்து தியானங்களை எழுதியுள்ளார்கள். தியானங்கள் தங்களது ஆவிக்குரிய வாழ்வுக்கு பேருதவியாக இருக்க ஜெபிக்கிறோம். சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்

வரையறுக்கப்பட்ட வாழ்நாட்கள்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: யோபு 14: 1-14

அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர் (யோபு 14:5).

தேவன் தமது ஞானத்தால் மனிதனாகிய நம் மீதும் அவர் நம்மை வைத்துள்ள இவ்வுலகின் மீதும் விதித்த வரம்புகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் கடலுக்கு எல்லையை வைத்துள்ளார் (யோபு 38:10-11); சாத்தானையும் மட்டுப்படுத்தியுள்ளார் (1:12;2:6), தேசங்களுக்கு எல்லைகளை வரையறுக்கிறார் (அப்.17:26). ஏதேன் தோட்டத்திலிருந்த ஆதி பெற்றோர்களும் அவர்களுக்குரிய காரியங்களில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் தங்களது வரம்புகளை மீறியதால் வெளியேற்றப்பட்டனர் (ஆதி.3). நமது வாய்ப்புகள், வளங்கள் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றில் நீங்களும் நானும் தனித்தனியாக மட்டுப்பட்டவர்கள். தேவனே அவைகளுக்கு வரம்புகளை விதித்துள்ளார். நமது ஆயுசு நாட்கள் எண்ணப்பட்டுள்ளன. அந்த இறுதி நாளைத் தாண்டி நாம் செல்லக்கூடாது. அதை அவசரப்படுத்தினால் அது முட்டாள்தனம்.

சட்டத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமம். ஆனால் வாழ்க்கையில் நாம் அனைவரும் சமமல்ல; மனித வாழ்க்கை தனிப்பட்ட வரம்புகளை உள்ளடக்கியது. ஆனால், வரம்புகள் நமக்கு சுதந்திரத்தை அளிக்கின்றன. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு. அது பொதுசாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் வாகனம் ஓட்டுவதற்கு எனக்கு சுதந்திரத்தைத் தருகிறது. நானும் எனது மனைவியும் கடவுச்சீட்டு வைத்திருப்பதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததால், நாங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கும். ஊழியம் செய்வதற்கும் உதவி செய்கிறது.

அதுபோல நமது ஜெபத்திற்கு பதில் பெற விரும்பினால் நாம் சில நிபந்தனைகளுக்குட்பட வேண்டும். அவைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தால் தேவன் நமது தேவைகளை அருளுவார். இதுவே சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்றாகும். நாம் செய்ய விரும்பும் காரியங்களை செய்வது சுதந்திரம் ஆகாது; தேவன் குறித்திருப்பதை நான் செய்வதே மெய்யான சுதந்திரம்; என்னுடைய கீழ்ப்படிதல் எனக்கு ஆசீர்வாதத்தின் வழியைத் திறக்கும்.

உண்மையான சுதந்திரம் ஐக்கியத்தை ஊக்குவிக்கிறது. ஏனெனில் நமது திறமைகளும் உடைமைகளும் வரம்புகளுக்குரியவை. அநேக காரியங்கள் எனக்குத் தெரியாதவை; என்னால் செய்ய இயலாதவை. எனவே மற்றவர்களது உதவி எனக்குத் தேவை. தேவன் ஆதாமின் தனிமை நல்லதல்ல என்று கண்டார். எனவே அவனுக்கு உதவ ஏற்ற துணையை உண்டாக்கினார் (ஆதி.2:18-25). திருமணம், குடும்பம் மற்றும் நண்பர்கள் போன்றவை தேவன் நமக்குத் தந்த பரிசுகள். இவ்வுலகில் நம்மால் இயலாதவற்றுக்கு உதவ தேவனுடைய இருதயத்திலிருந்து இவை நமக்குத் தரப்பட்டவையாகும். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். குடும்பம், சமுதாயம் மற்றும் சபை ஆகியனவும் ஒத்தவை. நாம் ஒருவரையொருவர் சார்ந்து ஒருவருக்கொருவர் உதவவேண்டும்.

வாழ்க்கை சில வரம்புகளுக்குட்பட்டது, அவை நமக்கு சுதந்திரத்தைத் தந்து ஐக்கியத்தில் முடிகிறது. இந்த ஐக்கியமானது வாழ்வை தீவிரமாகக் கண்ணோக்க வைக்கிறது. நமது வாழ்வு மற்றவர்களுடன் அன்புடன் இணைந்தால் அவர்கள் சிறப்பானவர்களாக மாறுகிறார்கள், அவர்களை இழக்க நாம் விரும்புவதில்லை. “ஆகவே நாங்கள் ஞானமுள்ள இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங்.90:12) தேவன் நமது நாட்களைக் குறித்துள்ளார். ஆனால், அது நமக்குத் தெரியாது. நம்முடைய நாட்களையும் காரியங்களையும் அவர் தமது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். ஆனால், நம்மால் அந்த பக்கங்களைப் பார்க்க இயலாது (சங்.139:15-16).

காரியங்களின் தொகையாவது: நம்முடைய வாழ்க்கை குறுகினது! எனவே நாம் நமது வாழ்வையும் மற்றவர்களின் வாழ்வையும் மதிக்கவேண்டும். ஏனெனில் அவை வரம்புகளுக்குட்பட்டவை. தேவன் நமது வரம்புகளைக் குறித்துள்ளார். குறிப்பாக நமது ஆயுட்காலம்; எனவே தேவன் நமக்குக் கொடுக்கும் மணி நேரங்களையும், நாட்களையும் நாம் சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும். அதாவது தேவனுடைய சித்தத்தை அறிந்து அதைச் செய்யவேண்டும். “பகற்கால மிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவான் 9:4).

நமக்கு தரப்பட்டுள்ள வரம்புகள் தடைகள் அல்ல; அவை வாய்ப்புகள். நாம் என்ன செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதில் கவனம் செலுத்துவோம். “என்னால் எல்லாவற்றையும் செய்யமுடியாது, ஆனால், என்னாலும் ஏதாவது செய்யமுடியும். என்னால் இயலும்வரை தேவன் எனக்கு கொடுத்துள்ள காரியங்களில் உண்மையாக இருக்கவேண்டும்”.

“ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” (எபேசியர் 5:15-16).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வேதாகமம் பற்பல மொழிகளில் எழுதப்பட்டன!

வேதாகமம் உருவானது எப்படி? (செப்டம்பர் – அக்டோபர் 2025)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமம் மூன்று மொழிகளில் எழுதப்பட்டன. அவை:

1.எபிரேயம், 2.அரமேய மொழி, 3.கிரேக்க மொழி

பழைய ஏற்பாட்டில் பெரும்பகுதி எபி ரேய மொழியில் எழுதப்பட்டது. சில பகுதி கள்மட்டும் அரமேய மொழியில் எழுதப்பட்டன அவை:

1. எஸ்றா 4 முதல் 8 வரை உள்ள அதிகாரங்கள்.

2. தானியேல் 2 முதல் 7 வரை உள்ள அதிகாரங்கள்.

3. எரேமியா 10:11.

எபிரேயமொழி அழகிய சித்திர வடிவான மொழி. எபிரேயர்கள் சித்திரங்களாய் சிந்தித்தார்கள். எனவே பெயர்ச் சொற்கள் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தன. அவர்கள் தெளிவாக, உவமை, உருவகங்களுடன் பேசினார்கள், ஒவ்வொன்றும் “ஜீவன்” உள்ளதாக துடிப்புள்ளதாகவும் கருதப்பட்டது. பால் வேறுபாடு காட்டாத பால் இம்மொழியில் இல்லை (Neuter). எபிரேய மொழியில் ஒரு கதையை நாடகமாக்குவது எளிது, தேவனுடைய மக்களாகிய இஸ்ரவேலரின் செயல்பாடுகளை வர்ணிக்க இம்மொழி மிகவும் ஏற்றது.

எபிரேய மொழி தனிப்பட்ட நபருக்குரிய மொழியாகும். இது இருதயத்திற்கும் உணர்ச்சிகளுக்கும் கிளர்ச்சியூட்டுவது; உள்ளத்துக்கு அல்ல.

எபிரேய மொழி பேசுகிறவர்கள் எபிரேயர்கள். எபிரேயர்களும் இஸ்ரவேலரும் ஒன்றே. இஸ்ரவேலரின் நாட்டில் எபிரேய மொழி இருந்தது. தேவன்தாம் நேசிக்கும் மக்களை இஸ்ரவேல் நாட்டில் தழைத்தோங்கச் செய்வார். அவர் சொல்லுவதைப் பாருங்கள்: “நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன். ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்” (மல்கியா 1:2,3). தேவன் இஸ்ரவேல் தேசத்தை யாக்கோபுவுக்காக நேசித்திருக்கிறார்.

புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்க மொழி யில் எழுதப்பட்டுள்ளது. கிரேக்க மொழி எபிரேய மொழியைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. இது ஒரு அறிவுப்பூர்வமான மொழி! இது உள்ளத்துக்கும் பிரியமான மொழி; இருதயத்துக்கு அல்ல. கிரேக்க மொழியில் ஒரு காரியத்தை அறிவுபூர்வமாக்குவது எளிது; ஒரு கருத்தை எளிதாக வெளிப்படுத்தலாம். எனவே இறையியல் கருத்துக்களை கிரேக்க மொழியில் வெளிப்படுத்த முடியும். எபிரேய மொழியில் இல்லாத ஒரு மொழித் தெளிவு கிரேக்க மொழியில் உள்ளது.

எபிரேய மொழியைப் போலல்லாமல், கிரேக்க மொழி உலகமெங்கும் நாகரீகம் மிகுந்த நாடுகளில் புதிய ஏற்பாட்டு காலத்தில் பேசப்பட்டது.

கிறிஸ்துவின் நற்செய்தி உலகெங் கும் எல்லாத் தேசங்களுக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும் (லூக்கா 24:47). எனவே இந்த நற்செய்தி கிரேக்க மொழியில் கூறப்பட வேண்டும் என்று தேவன் விரும்பினார். கிரேக்க மொழி இயற்கையாகவே எல்லோராலும் சாதாரணமாகப் பேசப்பட்ட மொழி. தெருவில் போகும் எல்லோரும் கிரேக்க மொழி பேசுவார்கள்.

புதிய ஏற்பாட்டில் உள்ள கொள்கைகள், நற்செய்தி, இவற்றை வெளிப்படுத்தவும் மற்றவர்களுக்குக் கூறவும் கிரேக்க மொழி மிகவும் வசதியாக இருந்தது.

வேதாகமம் ஏன் எழுதப்பட்டது?

வேதாகமம் எழுதிவைக்கப்பட்டி ருப் பதில் அநேக நன்மைகள் உண்டு.

1. முதலாவது தெளிவு

பேசுவதைக் காட்டிலும் எழுதுவது மிகவும் தெளிவாக ஒரு காரியத்தை பதிவு செய்ய உதவும்.

2. இரண்டாவதாக பரவச்செய்தல்

மனிதர்கள் இறந்துபோகிறார்கள். நினைவுகள் மறந்துபோக வாய்ப்புண்டு. ஆனால், தேவனுடைய சத்தியங்களையும், வார்த்தைகளையும் எழுதி வைத்திருந்தால் அவை எவ்வளவு காலத்துக்கும் அழியாமல் இருக்கும். நற்செய்திப் பணி யாளர்கள் தங்கள் ஊழியத்தின் மூலமாக ஆதாயப்படுத்தப்படும் புதிய விசுவாசிகளி டம் தேவனுடைய வார்த்தைகள் அடங் கிய வேதாகமத்தைக் கொடுக்கலாம். அவர்கள் அதைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். தேவஊழியர்கள் வேதாகமத்தைக் கொடுத்துவிட்டு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டாலும் புதிய விசுவாசிகள் அதைப்படித்து, ஆவியில் வளரவும், கள்ளப்போதனைகளை எதிர்த்து வெறுக்கவும் வாய்ப்பு உண்டாகும். உலகில் துன்பங்களால் ஆட்கள் இறந்துபோனாலும் வேதாகமம் அழியாமல் இருக்கும்.

வேதாகம நூல்களை எழுதிய ஆதி எழுத்தாளர்களை தேவன் அழைத்து, அபிஷேகம் பண்ணி, ஆசீர்வதித்து எழுதும்படி அகத்தூண்டுதல் கொடுத்து, ஆவியானவரின் நடத்துதல் எப்போதும் அவர்களுடன் இருக்கச்செய்தார். தேவன் கூறியதை, இயேசுவின் போதனைகளை அப்படியே தவறில்லாமல் எழுதும்படி அனுக்கிரகம் பண்ணினார்.

இதில் மிகவும் சிறப்பான அம்சம் என்னவென்றால், எழுதப்பட்ட வேதநூல்களில் தேவன் தம்மை வெளிப்படுத்தினார். கற்பனை செய்துபாருங்கள். தேவன் தமது உள்ளத்தில் இருப்பதை நமக்குத் தெரிவிக்கும் அளவுக்கு நம்மை நேசித்திருக்கிறார். இந்த 21ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நாம் நம்பி, விசுவாசிப்பதற்கு ஏதாவது வேண்டும் என்று தேவன் அறிந்திருந்தார். இந்தக் கடைசிக்காலத்தில் தோன்றி இயங்கிக்கொண்டிருக்கும் இயக்கங்கள், ஊழியங்கள், ஊழியர்கள். பேச்சாளர்கள் இவர்களை நடுநிலையில் நின்று மதிப்பீடு செய்யத் தெரியவேண்டும், அதற்கு நமக்கு அறிவும், பயிற்சியும், திறமையும் வேண்டும்.

கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம் தான் நமக்குத் திட்டமான உரைகல், அவர் நம்மை நேசித்தபடியால் நம்மை யூகித்துக்கொண்டும், அனுமானித்துக்கொண்டும் இருக்கச் சொல்லவில்லை. நாம் அறியவேண்டிய அனைத்துக் காரியங்களையும் அவர் வேதாகமத்தில் எழுதச்செய்திருக்கிறார். நாம் தேவையானவற்றை அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

சத்திய வசனம் (ஜூலை – ஆகஸ்டு 2025)